சிங்கப்பூரின் Hall of fame விருது பெற்ற எழுத்தாளர் கமலாதேவி அரவிந்தன்…!!!

சிங்கப்பூரின் Hall of fame விருது பெற்ற எழுத்தாளர் கமலாதேவி அரவிந்தன்...!!!

சிங்கப்பூர்:சிங்கப்பூரில் சிறந்த பெண்களை அங்கீகரிக்கும் Hall of fame பட்டியலில் எழுத்தாளர் கமலாதேவி அரவிந்தன் உட்பட ஆறு பெண்கள் சேர்க்கப்பட்டுள்ளனர்.

2014 முதல், 198 பெண்கள் இந்த அங்கீகாரத்தைப் பெற்றுள்ளனர்.

திருமதி கமலா தேவி 75 வயது மதிக்கத்தக்கவர். இவர் பிரபல எழுத்தாளர் மற்றும் நாடக ஆசிரியர் ஆவார்.தமிழ் மற்றும் மலையாளம் என இரண்டிலும் திறமையான எழுத்தாளராக அறியப்படுபவர்.

தேசிய நூலக வாரியம் மற்றும் சிங்கப்பூர் தமிழ் எழுத்தாளர் சங்கத்தால் ஏற்பாடு செய்யப்பட்ட பல்வேறு எழுத்துப் பட்டறைகளையும் அவர் நடத்தியுள்ளார்.

திருமதி கமலாதேவி எழுதிய நாவலான செம்பவாங் சிங்கப்பூரின் மிகச்சிறந்த நாவல்களில் ஒன்றாகக் கருதப்படுகிறது.

மேலும் இதன் சிறப்புக் கருதி இது ஆங்கிலத்திலும் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது.

அவரது படைப்புகள் சிங்கப்பூர், மலேசியா, இந்தியா மற்றும் கனடாவில் வெளியிடப்பட்டுள்ளன.

“ஒரு தாயாகவும் ,மனைவியாகவும் இருக்கும்போது எழுத்தில் சிறந்து விளங்குவது அவ்வளவு எளிதான காரியம் இல்லை.நான் பகல் நேரத்தை குழந்தைகளுக்காகவும் குடும்பத்திற்காகவும் அர்ப்பணிப்பேன். அமைதியான இரவு நேரங்களில் அதிகம் எழுதுவேன்.பல சவால்களுக்கு மத்தியிலும், எழுத்து மீதான எனது ஆர்வம் ஒருபோதும் குறையவில்லை,” என்று திருமதி கமலாதேவி அரவிந்தன் செய்தியாளர்களிடம் கூறினார்.

பாரதியாரின் எழுத்துக்கள் தான் தன்னை இந்தத் துறைக்கு ஈர்த்ததாக அவர் கூறினார்.

“பெண்கள் பல்வேறு பொறுப்புகளை சுமக்கும் போது அவர்கள் எதிர்கொள்ளும் சவால்களை கவனித்தேன். அதிலிருந்து அவர்கள் மீண்டுவரும் ஆற்றலையும் பார்த்தேன். அவர்களின் வலிமையும் உறுதியையும் பதிவு செய்வதற்கான வழியாக எழுத்துத் துறை அமைந்தது ”என்று கூறினார்.

Hall of fame கௌரவத்தைப் பெற்ற மேலும் ஐவர்..

✨️ லியூ பின் 51 வயதான அவர் சர்வதேச அளவில் அங்கீகரிக்கப்பட்ட விஞ்ஞானி மற்றும் பொறியாளர்.

✨️ 67 வயதான ஐவி எங், ஒரு மருத்துவர் மற்றும் சிங்ஹெல்த்,KK மகளிர் மற்றும் குழந்தைகள் மருத்துவமனையின் முன்னாள் தலைமை நிர்வாக அதிகாரி ஆவார்.

✨️ 84 வயதான கொன்ஸ்டன்ஸ் சியர்ஸ், சிங்கப்பூர் தேசிய அருங்காட்சியகத்தில் ஆரம்பகால கலைக் கண்காணிப்பாளராக இருந்த இவர், 1976 இல் தேசிய அருங்காட்சியகக் கலைக்கூடத்தை நிறுவ உதவினார்.

✨️ இசைக் கல்வியாளரான 77 வயதான விவியன் கோ,1980 ஆம் ஆண்டு சிங்கப்பூர் தேசிய இளைஞர் இசைக்குழுவை நிறுவினார். இது இப்போது ஆசியாவின் சிறந்த இளைஞர் இசைக்குழுக்களில் ஒன்றாகக் கருதப்படுகிறது.