சிங்கப்பூரில் நைட்ரஜன் சல்ஃபைட் வாயுவை சுவாசித்த இந்திய ஊழியர் மரணம்…

சிங்கப்பூரில் நைட்ரஜன் சல்ஃபைட் வாயுவை சுவாசித்த இந்திய ஊழியர் மரணம்...

சிங்கப்பூர்: சுவா சூ காங் தண்ணீர் சுத்திகரிப்பு ஆலையில் சுத்தம் செய்யும்போது ஏற்பட்ட விபத்தில் PUB துணை ஒப்பந்த ஊழியர் ஒருவர் இறந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.

இச்சம்பவம் வியாழக்கிழமை( மே 23) காலை சுமார் 11.15 மணியளவில் நடந்ததாக கூறப்படுகிறது.

சிங்கப்பூர் சுவா சூ காங் தண்ணீர் சுத்திகரிப்பு ஆலையானது சிங்கப்பூரிலேயே இரண்டாவது ஆகப்பெரிய தண்ணீர் ஆலை ஆகும். இங்கு ஒவ்வொரு நாளும் 364 மில்லியன் லிட்டர் தண்ணீர் சுத்திகரிக்கப்படுகிறது.

ஊழியர்கள்
வழக்கம்போல் தண்ணீர் தொட்டியை சுத்தம் செய்யும் பணியை மேற்கொண்டபோது சுத்திகரிக்க பயன்படுத்தப்படும் ரசாயனத்தில் இருந்து வெளியேறிய நைட்ரஜன் சல்ஃபைட் வாயுவை சுவாசித்ததால் ஊழியர்கள் மயங்கி கிடந்ததாக பொது பயனீட்டு கழகம்( PUB ) கூறியது.

தண்ணீர் சுத்திகரிப்பதற்காக பயன்படுத்தப்பட்ட ரசாயனத்திலிருந்து வெளிவந்த அதிகப்படியான நச்சு வாயுவை அவர்கள் சுவாசித்ததாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

நைட்ரஜன் சல்ஃபைட் வாயுவை ஒருவர் அதிகப்படியாக சுவாசித்தால் மூச்சுத் திணறல் ஏற்பட்டு மயக்கம் உண்டாகி சுயநினைவை கூட இழக்க வாய்ப்புண்டு.

இந்நிலையில் மூன்று ஊழியர்களும் சுயநினைவற்ற நிலையில் அருகிலுள்ள இங் டெங் ஃபோங்(Ng Teng Fong) மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.

அதில் ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

மற்ற இருவரும் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இறந்தவர் 40 வயது மதிக்கத்தக்க இந்தியர் என்றும், மற்ற இருவரும் 24 மற்றும் 39 வயது மதிக்கத்தக்க மலேசியாவைச் சேர்ந்தவர்கள் என்ற தகவல் வெளியாகி உள்ளது.

உடனடியாக விரைந்த தீயணைப்பு வீரர்கள் மற்றும் அபாயகரமான பொருட்களை கையாளும் நிபுணர்களின் உதவியுடன் பாதுகாப்பாக நைட்ரஜன் சல்பைட் வாயுவை முழுமையாக அகற்றப்பட்டதாக குடிமை தற்காப்பு படை தெரிவித்தது.

இறந்த ஊழியரின் குடும்பத்திற்கு தங்களின் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்வதாகவும் தெரிவித்தது.

மேலும் ஊழியர்களின் நலன் தங்களுக்கு முக்கியம் என்று தெரிவித்தது.இச்சம்பவம் குறித்த விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு அளிக்கப்படும் என்று PUB தெரிவித்தது.

முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இதே போன்ற செயல்பாடுகளை நிறுத்தி அதனை பாதுகாப்பு நடைமுறை சோதிக்கப்பட்டு வருவதாக PUB கூறியது.