இந்தியா வெற்றி…!!! ஆட்டநாயகனாக தேர்ந்தெடுக்கப்பட்ட ரோஹித் சர்மா…!!!

இந்தியா வெற்றி...!!! ஆட்டநாயகனாக தேர்ந்தெடுக்கப்பட்ட ரோஹித் சர்மா...!!!

இங்கிலாந்து கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு டி20 தொடர் மற்றும் ஒருநாள் தொடர்களில் பங்கேற்கிறது.

டி20 தொடரில் இந்திய அணி 4-1 என்ற கணக்கில் வெற்றி பெற்று முன்னிலையில் உள்ளது. நாக்பூரில் நடந்த முதல் ஒருநாள் போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்று 1-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றது.

இதையடுத்து இன்று நடைபெறும் 2வது ஒருநாள் போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து கேப்டன் ஜோஸ் பட்லர் பேட்டிங்கை தேர்வு செய்தார்.

முதலில் களமிறங்கிய இங்கிலாந்து அணியில்
அதிகபட்சமாக ஜோ ரூட் 69 ரன்களும், பென் டக்கெட் 65 ரன்களும் எடுத்தனர்.

அடுத்து களம் இறங்கிய பிலிப் சால்ட் 26 ரன், ஹாரி புரூக் 31 ரன், கேப்டன் ஜோஸ் பட்லர் 34 ரன்களும் எடுத்தனர்.

ஜேமி ஓவர்டன் 6 ரன், கஸ் அட்கின்சன் 3 ரன், அடில் ரஷித் 14 ரன், லிவிங்ஸ்டன் 41 ரன் எடுத்து அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர்.மார்க் வுட் ரன் எதுவும் எடுக்காமல் ஆட்டமிழந்தார். இதனால் இங்கிலாந்து அணி 49.5 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 304 ரன்கள் எடுத்தது.

இந்திய அணி சார்பில் ரவீந்திர ஜடேஜா 3 விக்கெட்டும், வருண் சக்ரவர்த்தி, ஹர்திக் பாண்டியா, ஹர்ஷித் ராணா, முகமது சமி ஆகியோர் தலா 1 விக்கெட்டும் வீழ்த்தினர்.

இதனால் இந்திய அணி 305 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய இந்திய அணி வீரர்களில் ஹிட்மேன் ரோஹித் சர்மா நேற்று தனது பழைய அதிரடிக்கு திரும்பினார்.

கிட்டத்தட்ட 50 ஓவர்களில் 300 ரன்களைக் கடக்க வேண்டும் என்பதால் தொடக்க ஆட்டக்காரர்கள் இருவரும் நிலையான தொடக்கத்தை அளித்தனர்.

ரோகித் சர்மா 30 ஓவர்களில் 90 பந்துகளில் 7 சிக்ஸர், 12 பவுண்டரிகளுடன் 119 ரன்கள் எடுத்தார்.சுப்மன் கில் 52 பந்துகளில் 60 ரன்கள் எடுத்தார்.

கடந்த போட்டியில் தன்னம்பிக்கையை வெளிப்படுத்திய ஷ்ரேயாஸ் ஐயர் இந்த போட்டியிலும் வலுவாக இருந்து 44 ரன்கள் எடுத்து ரன் அவுட் ஆனார்.

கே.எல்.ராகுல் மற்றும் ஹர்திக் பாண்டியா இருவரும் தலா 10 ரன்களில் ஆட்டமிழந்தனர். ஆனால் ஆல்-ரவுண்டர் அக்சர் படேல் கடைசி வரை 41 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் அணியை வெற்றிப் பாதைக்கு அழைத்துச் சென்றார். ஜடேஜாவும் 11 ரன்களுடன் களத்தில் நின்றார்.

ரோஹித் சர்மாவின் அதிரடியான ஆட்டம் இந்திய ரசிகர்களுக்கு விருந்தாக அமைந்தது.இறுதியில் இந்திய அணி 44.3 ஓவரில் 6 விக்கெட் இழப்புக்கு 308 ரன்கள் எடுத்து இங்கிலாந்துக்கு எதிரான 2வது ஒருநாள் போட்டியில் 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இதன் மூலம் 3 போட்டிகள் கொண்ட தொடரை இந்திய அணி 2-0 என கைப்பற்றியது. இந்நிலையில் ரோஹித் சர்மா தன் மீது எழுந்த விமர்சனங்களுக்கு அதிரடியாக விளையாடி அனைவரையும் வாயடைக்க வைத்தார்.நீண்ட நாட்களுக்குப் பிறகு ஹிட்மேன் ரோஹித் சர்மா ஆட்ட நாயகனாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.