பாதுகாப்பு நடைமுறைகளை முறையாக பின்பற்றாத நிறுவனங்களுக்கு வைத்த ஆப்பு!!

பாதுகாப்பு நடைமுறைகளை முறையாக பின்பற்றாத நிறுவனங்களுக்கு வைத்த ஆப்பு!!

வேலை செய்யும் இடங்களில் ஊழியர்களின் பாதுகாப்பை உறுதி செய்வது நிறுவனங்களின் கடமையாகும். அவ்வாறு பாதுகாப்பு நடைமுறைகளை பின்பற்றாத நிறுவனங்களின் மீது நடவடிக்கை எடுக்க சட்டத்திற்கு அதிகாரம் உண்டு. தொழிலாளர் பாதுகாப்பு என்பது தொழிலுக்கு மிக அவசியமான ஒன்றாகும். தொழிலாளர் பாதுகாப்பாக செயல்பட்டால் தான் நிறுவனமும் அவர்களின் கூட்டு முயற்சியால் வளர்ச்சி அடைய முடியும். கடந்த சில ஆண்டுகளாகவே பாதுகாப்பு விதிமுறைகளை முறையாக பின்பற்றாமல் உயிரிழப்புகள் அதிகமாக ஏற்பட்டன. எனவே இதனை கருத்தில் கொண்டு சிங்கப்பூர் மனிதவள அமைச்சகம் நிறுவனங்களின் மீது கடுமையாக நடவடிக்கை எடுக்க முயற்சிக்கிறது.

உயரமான சூழலில் இருந்து வேலை செய்வதற்கான பாதுகாப்பு விதிமுறைகளை மீறியதற்காக 9 நிறுவனங்களுக்கு வேலைநிறுத்த உத்தரவை மனிதவள அமைச்சகம் பிறப்பித்துள்ளது.

அவர்களுக்கு 450,000 வெள்ளிக்கு மேல் அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது.

மனிதவள அமைச்சகம் அது தொடர்பான விவரங்களை வெளியிட்டுள்ளது.

இந்த ஆண்டு பிப்ரவரி மற்றும் ஏப்ரல் மாதங்களுக்கு இடையில் இந்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன. மேலும் ஆயிரத்துக்கும் மேற்பட்ட பணியிடங்களில் ஆய்வுகள் நடத்தியதாக அமைச்சகம் தெரிவித்துள்ளது.

உயரத்தில் இருந்து விழுவதைத் தடுக்க தேவையான நடவடிக்கைகளை எடுக்கத் தவறியது; பாதுகாப்பு கம்பிகள் மற்றும் தடுப்புகளை பயன்படுத்தாதது, உயரத்தில் வேலை செய்யும் போது முறையான வார் மற்றும் கவசம் அணியாதது, பாதுகாப்பு காலணிகள் மற்றும் கையுறைகள் அணியாதது போன்ற குற்றத்திற்காக நிறுவனங்களின் மீது நடவடிக்கைகள் எடுக்கப்பட்டது.

வேலை செய்யும் இடங்களில் பாதுகாப்பு இன்றி ஏணிகளை முறையற்ற முறையில் பயன்படுத்தியது போன்ற விதிமீறல்கள் சோதனை நடவடிக்கையின் போது தெரிய வந்தது.

தொழிலாளர்கள் உயரத்தில் இருந்து விழுந்த சம்பவங்களால் கடந்த ஆண்டு அதிக எண்ணிக்கையிலான இறப்புகள் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதனை தடுக்கும் பொருட்டு மனித வள அமைச்சகத்தால் ஆய்வு நடத்தப்பட்டு நிறுவனங்கள் பொறுப்பு ஏற்கும் வகையில் அபராதமும் விதிக்கப்பட்டது. இப்படி செய்வதனால் பாதுகாப்பு நடவடிக்கைகள் முறையாக பின்பற்றப்பட்டு அதனால் ஏற்படும் உயிரிழப்புகள் குறைய வாய்ப்பு உண்டு.