பணத்திற்காக தேவையில்லாத சிகிச்சை அளித்த மருத்துவர்கள்!!

பணத்திற்காக தேவையில்லாத சிகிச்சை அளித்த மருத்துவர்கள்!!

சிங்கப்பூர்:சிங்கப்பூரில் மெடிஷீல்டு விண்ணப்பங்களை தவறாக சமர்ப்பித்த 6 மருத்துவர்களுக்கு எதிராக சுகாதார அமைச்சகம் அமலாக்க நடவடிக்கையை எடுத்துள்ளது.

சுகாதார அமைச்சின் மெடிசேவ் மேலாண்மை அலுவலகம் இந்த சம்பவங்களை கண்டுபிடித்துள்ளது.

இரண்டு மருத்துவர்கள் மெடிசேவ், மெடிஷீல்டு லைஃப் தரச் சான்றிதழ்களை இழந்தனர். இது தொடர்பாக 4 மருத்துவர்களுக்கு கட்டாயப் பயிற்சி எடுக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது.

சான்றிதழை இழந்த இரு மருத்துவர்களின் பெயர்களை சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ளது.

அவர்கள் டாக்டர் தியோ சிங் சிங் மெலிசா மற்றும் டாக்டர் லிம் பெய் யி நட்டாஷா ஆகியோர் ஆவர்.

இதில் சம்பந்தப்பட்ட மேலும் நான்கு மருத்துவர்களின் பெயர்கள் வெளியிடப்படவில்லை.

மெடிசேவ் என்பது ஒரு தேசிய மருத்துவ சேமிப்புத் திட்டமாகும்.இது தனிநபர்கள் தங்கள் வருமானத்தில் ஒரு பகுதியை சுகாதாரத் தேவைகளுக்காக ஒதுக்கப்படும் தொகையின் மூலம் சிகிச்சைகளை பெற்றுக் கொள்ளலாம்.

மெடிஷீல்டு லைஃப் என்பது தேசிய சுகாதார காப்பீட்டுத் திட்டமாகும். இது சிங்கப்பூர் குடிமக்கள் மற்றும் நிரந்தர குடியிருப்பாளர்கள் அனைவருக்கும் வாழ்நாள் முழுவதும் பாதுகாப்பை வழங்கும் ஒரு திட்டமாகும்.

மத்திய வருங்கால வைப்பு நிதி (CPF) வாரியத்தால் நிர்வகிக்கப்படும் அடிப்படை உடல்நலக் காப்பீட்டுத் திட்டமாகும்.MSHL ஆனது பெரிய மருத்துவமனை கட்டணங்களையும், சிறுநீரக டயாலிசிஸ் மற்றும் புற்றுநோய்க்கான கீமோதெரபி போன்ற தேர்ந்தெடுக்கப்பட்ட விலையுயர்ந்த சிகிச்சைகளை நோயாளிகள் இத்திட்டத்தின் மூலம் பெறலாம்.

தற்போது, ​​2,400 வகையான அறுவை சிகிச்சைகளுக்கான தொகையை மெடிசேவ் மற்றும் மெடிஷீல்டு திட்டத்தின் மூலம் விண்ணப்பிக்கலாம்.

அறுவை சிகிச்சைகளுக்கான தொகை குறித்த விவரங்கள் அமைச்சகத்தின் பட்டியலில் உள்ளது.

6 மருத்துவர்களில் சிலர் ஒரே சிகிச்சைக்கு அதிக தொகை வேண்டி விண்ணப்பத்தை சமர்ப்பித்து உள்ளனர்.

மேலும் மருத்துவர்கள் சிலர் நோயாளிகளுக்கு தேவையில்லாத சிகிச்சைகளை அளித்துள்ளதும் தெரிய வந்துள்ளது.