போலியான கையெழுத்திட்ட அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க கோரி சமூக ஆர்வலர் சிவகங்கை எஸ்பி யிடம் புகார் மனு!!

போலியான கையெழுத்திட்ட அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க கோரி சமூக ஆர்வலர் சிவகங்கை எஸ்பி யிடம் புகார் மனு!!

தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் மனு அனுப்பிய சமுக ஆர்வலருக்கு, தகவல் கிடைத்ததாக போலியான கையெழுத்திட்ட அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க கோரி சமூக ஆர்வலர் சிவகங்கை எஸ்பி யிடம் புகார் மனு.

சிவகங்கை மாவட்டம் இளையான்குடி அருகே சாலை கிராமத்தைச் சேர்ந்தவர் சமூக ஆர்வலர் ராதாகிருஷ்ணன். இவர் பேரூராட்சிக்கு உட்பட்ட கண்மாய், ஊரணி, குளம், வரத்துக் கால்வாய் உள்ளிட்ட பகுதிகளில் தூர்வாரப்படுவதற்கு அரசு வழிகாட்டு நெறிமுறைகள் குறித்த தகவலை அளிக்குமாறு ஆர்டிஐ மூலம் சிவகங்கை பேரூராட்சிகளின் உதவி இயக்குனர் அலுவலகத்திற்கு விண்ணப்பித் திருந்தார். இதற்கு உரிய பதில் கிடைக்காததால் இது குறித்து மேல்முறையீடும் செய்திருந்தார்.

இம்மனு மீதான விளக்கங்களை இளையான்குடி பேரூராட்சி அலுவலகத்திலிருந்து பெற்றுக் கொண்டதாக தனது கையொப்பமிட்ட கடிதம் செயல் அலுவலர் அளித்துள்ளதாக மேல்முறையீட்டு ஆணையத்தில் இருந்து சமூக ஆர்வலர் ராதாகிருஷ்ணனுக்கு கடிதம் வந்துள்ளது. தனக்கு உரிய தகவல் வழங்காத நிலையில் தனது கையெழுத்தை போலியாக பதிவிட்டு தகவலைப் பெற்றுக் கொண்டதாக, செயல் அலுவலர் ஒப்புதலுடன் பேரூராட்சி அதிகாரிகள் ஈடுபட்டதை அறிந்து அதிர்ச்சிக்குள்ளானார்.

தனது கையெழுத்தை போலியாக பதிவிட்ட அரசு அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என இளையான்குடி காவல் நிலையத்தில் சமூக ஆர்வலர் ராதாகிருஷ்ணன் புகார் அளித்தார். ஆனால் இதுவரை இளையான்குடி காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யவில்லை எனக் கூறி இன்று சிவகங்கை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அரவிந்த் – தனை நேரில் சந்தித்து புகார் மனு அளித்தார். தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் உரிய விளக்கம் தராமல், விளக்கம் தந்ததாக போலியாக அரசு அதிகாரிகள் கையெழுத்திட்ட சம்பவம் ஜனநாயகத்தை கேள்விக்குறியாக்கியுள்ளது.