பொன்னமராவதியில் நடைபெற்ற மக்கள் தொடர்பு முகாம்!! அரசின் நலத்திட்ட உதவிகளை வழங்கி நிகழ்ச்சியை சிறப்பித்த கலெக்டர்!!

பொன்னமராவதியில் நடைபெற்ற மக்கள் தொடர்பு முகாம்!! அரசின் நலத்திட்ட உதவிகளை வழங்கி நிகழ்ச்சியை சிறப்பித்த கலெக்டர்!!

பொன்னமராவதி, ஜன.11- பொன்னமராவதி அருகே மேலத்தானியத்தில் நேற்று நடைபெற்ற மக்கள் தொடர்பு முகாமில் 502 பயனாளிகளுக்கு ரூ.1.31 கோடி மதிப்பீட்டில் அரசின் நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் மெர்சி ரம்யா வழங்கினார்.

புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி அருகே மேலத்தானியம் ஊராட்சியில் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறையின் சார்பில் மக்கள் தொடர்பு முகாம் மாவட்ட ஆட்சித்தலைவர் மெர்சி ரம்யா தலைமையில் நடைபெற்றது. இம்முகாமில் தமிழக அரசு பல்வேறு அரசுத் துறைகளின் வாயிலாக மேற்கொள்ளப்படும் மக்கள் நலத் திட்டங்கள் மற்றும் சாதனைகள் குறித்தும் அத்திட்டங்கள் மூலம் பயன்பெறுவதற்கான வழிமுறைகள் குறித்தும் தொடர்புடைய அலுவலர்களால் பொதுமக்களுக்கு எடுத்துரைக்கப்பட்டது.

மேலும் இம்முகாமில் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை, பொதுசுகாதாரத்துறை, வேளாண் பொறியியல் துறை, வேளாண்மைத்துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளின் சார்பில் கண்காட்சி அரங்குகள் அமைக்கப்பட்டிருந்தது.
மேலத்தானியம் கிராமத்தில் நடைபெற்ற மக்கள் தொடர்பு முகாமில், வருவாய்த்துறை, வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை, தோட்டக்கலை மலைப்பயிர்கள் துறை, மாற்றுத்திறனாளிகள் நலத்துறை, தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம், மாவட்ட தொழில் மையம், பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளின் சார்பில் 502 பயனாளிகளுக்கு ரூ. 1,31,47,847 மதிப்பீட்டில் பல்வேறு அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கி பேசிய மாவட்ட ஆட்சித்தலைவர் ஐ.சா.மெர்சி ரம்யா மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் பொதுமக்களின் குறைகளை மனுக்களாக பெற்று தீர்வு காணும் நோக்கத்தில் மாதந்தோறும் ஒரு குக்கிராமத்தை தேர்வு செய்து, மக்கள் தொடர்பு முகாம் நடத்திட அறிவுறுத்தியுள்ளார்கள்.

அதன்படி நேற்றைய தினம் மேலத்தானியம் கிராமத்தில் மக்கள் தொடர்பு முகாம் நடத்தப்பட்டது. இம்முகாமில் தமிழக அரசின் சார்பில் பல்வேறு துறைகளின் மூலம் மேற்கொள்ளப்பட்டுவரும் திட்டங்கள் மற்றும் சாதனைகள் குறித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் அரசின் திட்டங்களை விளக்கும் கண்காட்சி அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளதை பொதுமக்கள் அனைவரும் பார்வையிட்டு, தமிழக அரசு செயல்படுத்தி வரும் திட்டங்களை அறிந்துகொண்டு பயன்பெற வேண்டும் என்றும்.

மேலும் பொதுமக்கள் அனைவரும் அளிக்கும் மனுக்கள் மீது மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு விரைவில் தீர்வு காணப்படும் எனவும்.

அரசின் சார்பில் செயல்படுத்தப்படும் திட்டங்களின்கீழ் பயன்பெறுவதற்கு பொதுமக்கள் அனைவரும் கோரிக்கை மனுக்களை அளித்து பயன்பெறலாம் எனவும்.இம்மனுக்களின் மீது துறை சார்ந்த அலுவலர்களால் உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதை உறுதி செய்யும் வகையில் மாவட்ட ஆட்சியரகத்தில் கண்காணிப்பு அலுவலர் நியமிக்கப்பட்டு பொதுமக்களின் கோரிக்கை மனுவின் நிலை குறித்து அவ்வப்போது ஆய்வு செய்யப்பட்டு வருகிறது என்றும்.

எனவே பொதுமக்கள் அனைவரும் இம்முகாமினை உரிய முறையில் பயன்படுத்திக்கொண்டு தங்களது அடிப்படை தேவைகளை பூர்த்தி செய்துகொள்ள வேண்டும் என மாவட்ட ஆட்சித்தலைவர் ஐ.சா.மெர்சி ரம்யா பேசினார்.

பின்னர் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் வேளாண்மை பொறியியல் துறையின் மூலம் பயனாளிக்கு மின் மோட்டாரினையும், பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத் துறையின் மூலம் பயனாளிக்கு விலையில்லா தையல் இயந்திரத்தினையும், மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் மூலம் மாற்றுத்திறனாளிகளுக்கு உதவி உபகரணங்களையும், தோட்டக்கலைத்துறையின் மில் மைய மூலம் பயனாளிகளுக்கு இடுபொருட்களையும், மாவட்ட தொழில் மையத்தின் மூலம் பாரத பிரதமரின் வேலைவாய்ப்பு உருவாக்கும் திட்டத்தின்கீழ் பயனாளிக்கு வாகனத்தினையும், மேலத்தானியம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில், அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசாக ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை, முழுக் கரும்பு மற்றும் ரூ.1,000/- ரொக்கம், இலவச வேட்டி, சேலைகளையும் வழங்கினார்.

மேலும் மேலத்தானியம் அங்கன்வாடி மையத்தில் குழந்தைகளுக்கு வழங்கப்படும் உணவின் தரம் குறித்தும், அடிப்படை வசதிகள் குறித்தும் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

இந்நிகழ்வுகளில் இணை இயக்குநர் (வேளாண்மை) பெரியசாமி, இலுப்பூர் வருவாய் கோட்டாட்சியர் தெய்வநாயகி, மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலர் அமீர் பாஷா, மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலர் ஸ்ரீதர், துணை இயக்குநர் (சுகாதாரப்பணிகள்) மரு.ராம்கணேஷ், செயற்பொறியாளர் (வேளாண் பொறியியல்துறை) செல்வம், மாவட்ட தொழில் மைய பொதுமேலாளர் திரிபுரசுந்தரி, ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சிப் பணிகள் திட்ட அலுவலர் புவனேஸ்வரி, பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவர் முத்து, உதவித் திட்ட அலுவலர் செல்வராஜ், வட்டாட்சியர் சாந்தா, வட்டார வளர்ச்சி அலுவலர் வீரையன், ஊராட்சிமன்றத் தலைவர் முருகேசன், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள், அனைத்துத் துறை அரசு அலுவலர்கள் மற்றும் பயனாளிகள் கலந்து கொண்டனர்.