H5N2 பறவை காய்ச்சலால் முதல் உயிர் பலி!! உறுதி செய்த உலக சுகாதார அமைப்பு!!

H5N2 பறவை காய்ச்சலால் முதல் உயிர் பலி!! உறுதி செய்த உலக சுகாதார அமைப்பு!!

மெக்சிகோவில் பறவை காய்ச்சலால் பாதிக்கப்பட்ட 59 வயதுடைய ஒருவர் உயிரிழந்துள்ளதாக கூறப்படுகிறது. இதனை ஜூன் 5-ஆம் தேதி உலக சுகாதார அமைப்பு தெரிவித்தது.அவர் H5N2 வகை பறவைக் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு உயிரிழந்துள்ளார் என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

அவருக்கு ஏப்ரல் 24-ஆம் தேதி காய்ச்சல், மூச்சு திணறல், வயிற்றுப்போக்கு, குமட்டல் போன்றவைகளால் பாதிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.

மேலும் இவர் மெக்ஸிகோ நகரில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஆனால் துரதிஷ்டவசமாக அவர் அன்றைய தினமே இறந்தார். அவரது இறப்பு எதனால் ஏற்பட்டது என்பது குறித்து ஆராய்ந்து அதற்கான உரிய காரணத்தை அறிந்த பின் மே 23-ஆம் தேதி ஐநா சுகாதார அமைப்பிடம் சுகாதார அதிகாரிகள் தெரிவித்தனர்.

H5N2 வைரஸ் மெக்சிகோவில் கோழிப் பண்ணையில் கண்டறியப்பட்டாலும், ஆனால் அது பரவியதற்கான ஆதாரம் இல்லை என்று WHO தெரிவித்துள்ளது.

சுகாதார அமைச்சகம் ஒரு அறிக்கையில் இவருக்கு நீண்டகால சிறுநீரக நோய், இரண்டு வகையான நீரிழிவு நோய் மற்றும் தமனி உயர் ரத்த அழுத்தம் போன்ற பிரச்சனைகளால் பாதிக்கப்பட்டிருப்பதாக கூறியது. மேலும் இறந்தவரின் வீட்டிற்கு அருகே உள்ள கோழிப் பண்ணைகளை அதிகாரிகள் கண்காணித்து வருவதாகவும் தெரிவிக்கப்பட்டது.

மேலும் அந்தப் பகுதியில் கண்காணிப்பு அமைப்பை அமைத்துள்ளதாகவும் சுகாதார அமைச்சகம் தெரிவித்தது.

இந்த தொற்று மனிதர்களிடமிருந்து மனிதனுக்கு பரவவில்லை,மாறாக பறவைகள் மற்றும் விலங்குகளிடம் இருந்தே பரவுகிறது என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.